Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Monday, July 23, 2012

மனம் - மூளையின் விளையாட்டு பொருள்!



நீண்ட நாட்களாகவே எனக்கு இருந்த ஒரு சந்தேகம். மனம் என்று நம் மனித உடம்பில் எந்த ஒரு உறுப்பும் கிடையாது. அப்படி யிருக்கையில் நாம் ஏன் அடிக்கடி மனசு சரியில்லை என்று சொல்கிறோம். மனம் என்று சொன்ன உடனேயே நம் கை ஏன் இதயத்திற்கு தானாக செல்கிறது. இது போன்று சில கேள்விகளுக்கு எனக்கு ஓரளவுக்கு விடை கிடைத்துவிட்டது. இதை தங்களுடன் எனது உரைநடையில் பகிர்கிறேன்.
நம்  மூளையில் எண்ணங்கள் உருவாக வேண்டுமல்லவா? அந்த எண்ணங்களின் தொகுப்பைத்தான் நாம் பொதுவாக மனம் என்று குறிப்பிடுகிறோம். மனமானது உள்ளிருந்தபடி செயல்படுவதால்தான் நமது உடல் வெளியிருந்தபடி செயல்படுகிறது. ஆதலால் மனத்தொகுப்பை அகக் கருவி என்று சொல்கிறார்கள்.
நமக்கு யாருடனாவது மனக்கசப்பு!(பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்கவும்) ஏற்ப்பட்டால் நாம் சற்றே சோகமாக காணபடுவோம். அப்போது யாராவது சோகத்திற்கு காரணம் கேட்டால் மனம் சரியில்லை என்றே சொல்லுவோம். அறிவியல் பூர்வமாக பார்த்தால் இது எல்லாம் மூளையின் திருவிளையாடல் தான். ஆம், நாம் பார்ப்பது, கேட்பது, உணர்வது என்று எல்லாவற்றையும் மூளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும்.
கண்கள் காண்பதை காது அறிவதில்லை. அதுபோலவே காது அறிந்ததை கண்களோ நாக்கோ அறிவதில்லை. எனவே அறிவுக்கருவிகளாகிய இவை வெறும் கேமரா, மைக் போன்ற சாதனங்களே ஒழிய கண்டதையோ உண்டதையோ கேட்டதையோ தாமாக அறிவதில்லை. மூளையில் இவற்றிற்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இவற்றிலிருந்து வழங்கப்பட்ட தகவல்கள் யாவும் உணர்வுகளாக மாற்றப்பட்டு மனம் என்ற கருவியாலேயே அறியப்படுகிறது. மனமானது ஐந்து புலன்களிலிருந்தும் வரும் தகவல்களை ஒருங்கிணைத்து அறிகிறது. மனத்தின் வேலை தகவல்களை ஒருங்கிணைப்பதாக இருந்தாலும் அதனால் கண்டதையோ கேட்டதையோ இன்னதென்று அறிவதற்கு அது மூளையின் துணை வேண்டும்.
நம் உடம்பில் இருக்கும் அனைத்து நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்படுவதால் மூளை தகவல் சேமிக்கும் ஹார்ட் டிஸ்க்காக(எத்தனை ஜிபி என்று கேட்க்ககூடாது) பயன்படுகிறது. நரம்புகள் யாவும் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுகிறது. நம் மூலையில் இதற்கு இது என்று ஒரு சில உணர்வுகள் கணினியில் பதிந்து வைத்தது போல இருக்கும். நாம் அதை மறுக்க நினைத்தாலும் அதை கட்டுபடுத்த முடியாது. அப்படியே, நாம் நம் சோகத்தை அல்லது சந்தோசத்தை வெளிக்காட்டாமல் இருந்தால் அதுவே மனஅழுத்தத்திற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதனால் மூலையில் உள்ள ரத்த குழாய்கள் வெடிக்கும் சூழ்நிலை ஏற்ப்படும்.
இன்றைய நவீன உளவியலும் நரம்பியலும் சேர்ந்து மூளையின் செயல்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறது. உயிரியல், நரம்பியல், மற்றும் உளவியல் வல்லுநர்கள் மனத்தை மூளையின் செயல்களினால் ஏற்படும் ஒரு நிகழ்வதாக கருதி மூளை நரம்பமைப்பின் அடிப்படையில் மனத்தை விளக்குகிறார்கள். இதை நியூரல் கோரிலேட்ஸ் ஆஃப் கான்சியஸ்னஸ் என்று அழைக்கிறார்கள். மனமானது மூளையில்தான் தோன்றி செயல்படுகிறது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. மூளையில் அடிபட்டால் மனம் கலக்கமடைவதை நாம் அறிகிறோம்.
மனத்தில் ஏற்படும் சித்தக் கோளாறுகளுக்கு மூளையில் செயல்படும் நினைவலைகளை தான் மருந்தாக பயன்படுத்துகிறோம். மூளையைச் சரிசெய்தால் மனம் சரியாவதை அறிகிறோம். எனவே சுருங்கச் சொல்லவேண்டுமாயின் மனமும் மூளையும் ஒன்றே. மூளை கருவி என்றால் மனம் அதன் செயலாகும்.




9 comments:

  1. அருமையான பதிவு நண்பரே.. மனமும் மூளையும் ஒன்றோடு ஒன்று என்பது அறிவியலின் சமன்பாடு.

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கு நன்றி நண்பரே.

      Delete
  2. //சுருங்கச் சொன்னால் மூளையும் மனமும் ஒன்றே//

    நல்ல ஆய்வு. நல்ல முடிவு.

    பாராட்டுகள் நண்பரே.

    ReplyDelete
  3. மனம் மூளை குறித்த அருமையான பதிவு.

    ReplyDelete
  4. நண்பரே, சில விஷயங்களை விவரிக்க விரும்புகிறேன். கருத்துப் பறிமாற்றத்திற்கு மட்டுமே, நன்கு கவனிக்க, விவாதம் செய்வதற்கல்ல.
    நீங்கள் கையில் எடுத்திருக்கும் கருப் பொருள், ஒரு மிகப்பெரிய விஷயம். பிரபலமான ஒரு வாசகம் உண்டு, அது, ”அறிவியல் மனித மூளையைப் பற்றி 99% தெரிந்து கொண்டுள்ளது, ஆனால் மனித மூளை எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி 1% கூட தெரிந்து கொள்ள்வில்லை. அது இன்னும் ஒரு புரியாத புதிராகவே இருக்கின்றது”.

    நீங்கள் நன்கு யோசித்துப் பாருங்கள் (யோசிப்பது மூளையில் தான்) நீங்கள் பயப்படும் படியான சூழ்நிலை சட்டென்று ஒரு நொடியில் ஏற்படும் போது, அந்த உணர்வை எங்கு உணர்கிறீர்கள்?, ஏதோ ஒரு தவறு உங்களை அறியாமல் ஏற்பட்டு விடுகிறது, ஆனால் அதை சட்டென்று நீங்கள் உணரும் போது அல்லது மற்றவர்களால் சுட்டிக் காட்டப்படும் போது, நம்மை அறியாமல் தவறு செய்துவிட்டோம் என்று உணரும் போது அந்த தவறு செய்துவிட்டேம் என்ற பய உணர்வை எங்கே உணர்கிறீர்கள்?
    இன்னும் ஒரு உதாரணம். அலுவலகத்திற்கு கிளம்பி விட்டீர்கள், சொந்த வாகனத்திலோ, அல்லது பேரூந்திலோ சென்று கொண்டிருக்கிறீர்கள், அப்போது உங்களது கை பாக்கெட்டை தடவி, நிறைய பணத்துடன் இருந்த பர்ஸ் காணவில்லை என்று உணரும் போது அந்த உணர்வை எங்கு உணர்கிறீர்கள்?

    இந்த கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் தான் அந்த உணர்வை நீங்கள் உங்கள் மூளையில் உள்ள மனத்தில் உணர்ந்தாலும், அந்த உணர்வு வெளிப்படுவது உங்கள் இதயத்துடிப்பிலும், உங்கள் வயிற்றில் உருளும் ஒரு விதமான உணர்விலும்தான். ஒரு நாய் உங்களைத் தாக்கத் துரத்தினாலும், மனிதர்கள் உங்களைத் தாக்க துரத்தினாலும், ஏற்படுவது இதே உணர்வுதான்.
    மூளை ஒரு சிக்கலைத் தீர்க்கும் ப்ராப்ளம் சால்வர். அது உணர்வு களால் பாதிக்கப் படாது. அதிக பட்சம் அது முழு திறனில் இயங்கும், அதற்கு மேலே போனால் அது ரத்தக் குழாய் வெடிப்பில் சிதையும். ஆன்மீகத்தின் உயர்நிலையில் பல வருட பயிற்சிக்குப் பின் பெறப்படும் கடவுள் காட்சியை, முறையற்ற பயிற்சியின் மூலமாகவோ அல்லது சட்டென்றோ பெற்றாலோ, கிடைத்தாலோ மூளையில் ரத்தக் குழாய் வெடிக்கும்.

    ஒரு எளிமையான ஆன்மீக விளக்கம் ஒன்று உண்டு, அது, கண்கள் இந்த உலக்ப் பார்க்கின்றது, கண்களை மனம் பார்க்கின்றது, மனதை ஆன்மா பார்க்கின்றது.
    இதில் நாம் தெரிந்து கொள்வது, 5 புலன்களும் வெளிப்புறமாக வெளியுலகத்தோடு தொடர்பும், உற்புறமாக மனதோடு பிரிக்க முடியாதபடி இணைந்தும் உள்ளது. மனம் ஆன்மாவோடு இணைந்துள்ளது. ஆன்மா அழிவில்லாதது, உணர்வில்லாதது, ஆன்மாவிற்கு இன்பமும் துன்பமும் ஒன்றுதான், இது ஒரு சர்வ பூத சாட்சி. அதாவது பஞ்ச பூதங்கள் மட்டுமல்லாது அனைத்து பூதங்கள் செய்வதையும், ஒரு சாட்சியாக, அதாவது எந்த வித பற்றுதலும் இல்லாமல் பார்த்துக் கொண்டுள்ளது.

    இந்த மேற்கூறிய ஆன்மீக தத்துவத்தை அறிவியல் என்கின்ற கண்ணாடி வழியாக பார்த்தால் நீங்கள் கூறியபடி கண், கேட்பதில்லை, காது பார்ப்பதில்லை, அதாவது ஒரு புலனின் வேலையை மற்ற புலன்கள் செய்வதில்லை, ஆனால் அனைத்து புலன்களும் ஒரு கயிறால் கட்டப்பட்டு மனதிடம் இணைக்கப்பட்டுள்ளது. (இதுவே குருஷேத்திரப் போரில் தேரோட்டும் கிருஷ்ண பரமாத்மா. இந்த தேரில் கிருஷ்ணர் ஆன்ம தன்மையில் இருக்கின்றார். அர்சுனனே மனம், மனதிற்கு பலம் ஆன்மா, அறிவு.)

    இன்னும் சொல்லப் போனால் அனைத்தும் மாயை என்றால் அந்த மாயை நிகழ்வதற்கு ஒரு களம் வேண்டும், அந்த களமே மனம். மனம் என்பது ஒரு சூட்சும எந்திரம், அந்த எந்திரம் இயங்கும் முறைபற்றி தெரிந்தவர் இறைவனும், அந்த இறை சக்தியை கைவரப் பெற்ற சித்தர்களும், மகான்கள் மட்டுமே. இந்த சித்தர்களுக்கும், மகான்களுக்கும் டெலிவிஷனோ, ரேடியோவோ தேவையில்லை. ஆகையால் மகான்களை ஊடகங்களில் தேடாமல் உங்களுக்கு உள்ளே தேடுங்கள்.

    வெளிநாட்டில் நடந்த ஒரு சம்பவம் தெரிய வந்தது. இந்த சம்பவமும் மனம் சம்பந்தப் பட்டதுதான். ஒரு நபருக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை நடந்தது (கல்லீரலோ,மண்ணீரலோ அல்லது கணையமோ). இது நடந்த சில நாட்களில், அந்த நபரின் உணவுப் பழக்கத்தில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டது. அந்த நபரின் எண்ணத்திலும், கணவிலும் அடிக்கடி ஒரு நபரின் தோற்றம் ஏற்பட்டது. பின் ஆராய்ந்து பார்க்கையில் கனவில் வந்தது, உறுப்பை தானமாக பெறப்பட்ட (இறந்துவிட்ட) நபரின் உருவம் என்றும், உணவுப் பழக்கமும் இறந்துவிட்ட, உடல் உறுப்பை தானமாக பெற்ற நபருடையது என்றும் தெரியவந்தது. அதாவது நினைவுகள், மற்றும் பழக்க வழக்கங்கள் உடல் உறுப்பிலும் பதிந்துள்ளது.
    மனதைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அதைப் பற்றிய விஷயங்கள் நிறைய நமது சித்தர் நூல்களிலும்,சமய நூல்களிலும் மறைந்திருக்கின்றது
    அன்புடன்,
    பாலாஜி சுந்தர்,
    www.picturesanimated.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பரே.. இந்த கட்டுரை நான் எழுத காரணம். எனக்குள் இருந்த மனம் மற்றும் மூளையின் கட்டுப்பாடு போன்ற சந்தேகம் தான். மூளை என்பது வெறும் நினைவாற்றல் தான் என்று சிலர் நினைக்கின்றனர்.
      ஆனால், மனமும் மூளையும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்று தற்போது உணர்த்து கொண்டேன்.
      தங்களின் இந்த மேலான கருத்துக்களுக்கு நன்றி நண்பரே..தங்களின் இந்த கருத்துரை மூலம் நான் இன்னும் பல தகவல்களை தெரிந்து கொண்டேன்.

      நன்றி.

      Delete
  5. நல்ல தேடல் நண்பரே, அசரவைத்து விட்டீர்கள்... தொடரட்டும் தங்கள் பனி, வாழ்த்துகள்...

    ReplyDelete

 

வந்து போனவுங்க